PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, December 30, 2013

எங்கள் வீட்டில் ஆனந்தப் பிரசவம் -2- வெற்றுக்கூடு


இது எங்கள் வீட்டில் ஓர் ஆனந்தப் பிரசவத்தின் தொடர்ச்சி...
அதை வாசிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்.

உறங்கும் குஞ்சுகள்

அடுத்த நாள்  அருகில் சென்று கூட்டை கையில் தொடாமல் உள்ளே பார்த்தபோது கடைசி முட்டையும் பொரிந்து குஞ்சு வெளியே வந்திருந்தது.  கூட்டுக்குள் ஒரே குதூகலம்தான். எப்போதும் கீச் கீச் என்ற ஒலிகள எழுந்தவண்ணமே இருந்தன.

இரண்டு மூட்ன்று நாள் அவதானித்ததில் தாய்க்குருவி அதிகாலை குளிர் அடங்கும்வரை கூட்டுக்குள் இருக்கிறது.  சிறிது வெயில் வந்து கூதல் அடங்கிய பின் எட்டுமணிக்குமேலே கூட்டைவிட்டு இரையைத் தேடி போகிறது.  பிறகு அவ்வப்போது இரையுடன் வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுகிறது.  நாங்கள் யாரும் இரண்டு மூன்று நாட்கள் கூட்டின் அருகில் செல்லவே இல்லை.

அப்படியே போனாலும் தாய்க்குருவி கூட்டில இல்லாத சமயம் பார்த்து தொடாமல் எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவந்துவிடுவோம்.

கூட்டின் அருகிலேயே ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தூளி மாதிரி கட்டி அதில் தானியங்களை உடைத்து போட்டு வைத்தோம்.  தாய்க்குருவி இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும்.  கீச் கீச் என்று கூவிக்கொண்டு அந்த தானியங்களை கொத்தி தின்ன ஆரம்பித்தது.

அந்தக் கூடு மிகச் சிறியது.  தாய்க்குருவியோடு ஐந்து குருவிகளுக்கும் அந்த சிறிய கூடு போதுமானதா என்கிற கேள்வி எங்களுக்குள் உதித்தது.  இருந்தபோதும் கூட்டை கட்டிய குருவிக்கு இது தெரியாதா என்று வாளாவிருந்தோம்.

மூன்றாம் நாள் காலை பத்து மணிக்கு கூட்டின் அருகில் போய் பார்த்தபோது கூட்டினுள் தாய்க்குருவி இருக்கவில்லை.  ஆகையால் தைரியமாய் கூட்டுக்குள்ளே எட்டிப் பார்த்ததும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  கூட்டினுள் இப்போது இரண்டு குஞ்சுகள் மட்டுமே இருந்தது.  மற்ற இரண்டு குஞ்சுகள் எங்கேவெனத் தெரியவில்லை.  பறவைப் பார்வையாளர்களைக் கேட்டபோது..தாய்க்குருவி அதைத் தின்று இருக்கலாம் என்று கூறினார்கள்.  அடப்பாவி இப்படியும் நடக்குமா என்று வியப்பதைத் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

கூட்டின் இடப்பற்றாக்குறையால் தாய்க்குருவி இளம்குஞ்சுகளை தின்றிருக்க ஒரு நியாயம் இருந்தது.  இல்லாவிடில் மற்ற வளர்ந்த இருகுஞ்சுகளும் ஏறி மிதித்து இளம் குஞ்சுகள் செத்திருக்கலாம்.  தாய்க்குருவி செத்த குஞ்சுகளை அப்புறப்படுத்தி இருக்கக்கூடும்.  ஆனால் உடைந்த முட்டையின் ஒட்டுப்பகுதிகள் கூட்டினுள் இருக்கவில்லை.  கூடு நன்றாக சுத்தாமாகவே இருந்தன.

மனதைத் தேற்றிக்கொண்டு அந்தக் கூட்டை தினமும் அவதானிக்க ஆரம்பித்தோம்.  தாய்க்குருவி கூட்டில இல்லாத சமயம் பார்த்து கூட்டருகில் சென்று கையில் தொடாமல் அந்தக் குஞ்சுகளை கொஞ்சினோம். அதுவும் கூட்டருகில் யார் வந்தாலும் சத்தம் கேட்டதும் தாய்க்குருவிதான் வந்துவிட்டதென்று எண்ணி வாயைத் திறந்தபடி கத்தும்.  சில வேளைகளில் தாய்க்குருவி எண்கள் அருகிலேயே இருந்து நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தூரமிருந்து பார்த்தது.  பிறகு பயமின்றி எங்கள் அருகில் வந்தது.  நாங்கள் அதற்காக அதிர்ந்து கூட பேசுவதில்லை.  எல்லோரும் மௌனமொழியிலேயே பேசிக்கொள்வோம்.  ஆகையால் தாய்க்குருவி இப்போதெல்லாம் எங்களைக் கண்டு பயப்படுவதில்லை.

குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்க ஆரம்பித்தது.  கண்கள் மட்டும் பெரிதாகவே இருந்தது.  கால்கள் வளர்ந்திருந்தது.  கால் நகங்கள் முளைத்திருந்தது.  அவற்றின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.

அடுத்த நாள் மாலை மணி நான்கு இருக்கும்.  நான் ஆபீசிலிருந்து வந்ததும் முதல் வேலையாக கூட்டைப் பார்க்கப் போனேன்.  தாய்க்குருவி அங்கே இருக்கவில்லை.  கூட்டை எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.  கூடு வெற்றுக்கூடாக இருந்தது.  பசங்களையும் தங்கமணியும் கத்திக் கூப்பிட்டேன்.  அவர்கள் வருவதற்குள் அருகில் தேடினேன்.  கீழே ஒரு குஞ்சு விழுந்துகிடந்தது.  குனிந்து அதைப் பார்த்தேன்.  உயிர் இருந்தது.  அருகில் இன்னொரு குஞ்சுவும் கிடந்தது. அதுவும் உயிரோடேயே இருந்தது.  என்ன செய்வதென்று தெரியாமல் அதனருகில் அமர்ந்து நால்வரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.




ஒரு பிளாஸ்டிக் முறத்தை எடுத்து அலுங்காமல் இரு குருவிகளையும் எடுத்து கூட்டினுள் விட்டோம்.  கொஞ்சம் உயிர் இருக்கவே செய்தது.  அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு கூட்டைவிட்டு தள்ளி வந்து நின்றுகொண்டோம்.  இப்போது தாய்க்குருவி எங்கிருந்தோ வாயில் உணவோடு பதட்டமாக வந்து கூட்டுக்கு சென்றது.    கொஞ்ச நேரத்தில் குஞ்சுகளின் கீச் சத்தம் கேட்டதும்தான் எங்களுக்கு நிம்மதி வந்தது.

கூடு சிறியதாக இருப்பதால் அது கூட்டின்  விளிம்புக்கு வந்து தவறி கீழே விழுந்திருக்க வேண்டும். கூட்டுக்கும் கீழே தரைக்கும் சுமார் நான்கடி உயரம் மட்டுமே இருக்கும்.  நல்லவேளை உயரம குறைவாக இருந்ததால் அடி குறைவாகவே பட்டிருக்கும்.  ஆனால் குஞ்சுகள் எப்போது விழுந்தது, எவ்வளவு நேரம் அது தரையிலேயே கிடந்தது என்று தெரியவில்லை.   மதிய நேரமாகையால் தரையும் கொஞ்சம் சூடாகவே இருந்திருக்கும் என்பதை நினைக்கும்போது பதைப்பாகவே இருந்தது.  பாவம் குஞ்சுகள் அதை எப்படி தாங்கியதோ என்று மனதில் ஒரு பாரம் குடியேறி உட்கார்ந்துகொண்டது.

அன்றைய இரவு எங்கள் எல்லோருக்குமே பதற்றம் சூழ்ந்த நீளமான இரவாகவே இருந்தது.  குஞ்சுகள் பிழைத்துக்கொள்ள வேண்டும் என மனது அடித்துக்கொண்டது.



விடிகாலை எழுந்து ஆவலோடு கூட்டருகில் சென்றேன்.  கூட்டில் தாய்க்குருவி இருக்கவில்லை.  கூட்டினுள் சத்தமுமில்லை.  மிக மெதுவாக எட்டிப்பார்த்தேன்.  குஞ்சுக் குருவியின் கால் பகுதி மேலே தெரிந்தது.  இரண்டும் மல்லாக்க இருந்தது.


இன்னும் அருகில் சென்று பார்த்தபோது சலனமில்லாத அந்தக் குஞ்சுக்குருவிகள் இரண்டும் இறந்து கிடந்தன.  படாரென்று இதயம் வெடித்ததைப் போல உணர்ந்தேன்.  அதற்குள் வீட்டில் எல்லோரும் வந்து பார்த்து அதிர்ச்சியில் சிலையாயினர்.  தங்கமணியின் கண்கள் குளம் கட்டி நின்றது.  ஒருவாரமாக எங்கள் உணர்வுகளோடு விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குஞ்சுக்குருவிகளின் பிணங்கள்  எங்களின் இதயத்தை கொஞ்சம் அதிகமாகவே அசைத்துப் பார்த்தது.

அதை அப்படியே விட்டுவிட்டு நாங்கள் வந்துவிட்டோம்.  யாருக்கும் சாப்பிடத் தோன்றவில்லை.  மனசில் ஒரு பாரம் உட்கார்ந்துகொண்டு இம்சை செய்தது.  பிறகு நாமென்ன செய்வது என்று ஒருவாறாக எங்களை நாங்களே தேற்றிக்கொண்டோம்.  மதியம் சென்று பார்த்தபோது கூடு வெறுமையாக இருந்தது.  குஞ்சுகளைக் காணவில்லை.  கூட்டுக்குள் நான்கு குஞ்சுகள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் சுத்தமாக இருந்தன.  அந்த வெற்றுக்கூட்டை பார்க்கும்போது ஒரு தோல்வியின் தடயத்தைப் பார்ப்பதுபோலவே இருந்தது.



இப்போது கீச் கீச் எனும் சிம்பொனி இசை இல்லை... வீடு ஆழ்ந்த அமைதியில் இருந்தது.  ஆறுதலாக அவ்வப்போது தாய்க்குருவி மட்டும் வந்து ஜன்னலில் தலையை காட்டிவிட்டு தொங்கும் பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கும் தானியங்களை கொத்திவிட்டுப் போகும்.
இனி இங்கே கூடு கட்ட அனுமதியில்லை என்று எழுதி வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

 

Tuesday, December 24, 2013

எங்கள் வீட்டில் ஒரு ஆனந்தப் பிரசவம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டின் பின்புறத்தில் கீச் கீச் என்று சத்தம் கேட்க ஆரம்பித்தது.  இரண்டு தேன் சிட்டுகள் அவ்வப்போது வந்து விளையாடிவிட்டு போகும். 
வீட்டின் பின்புறத்தில் ஒரு கொடிரோஜா ஒன்று படர்ந்திருந்தது. அருகில் ஒரு மஞ்சள் கிழங்கு செடி.  ஒவ்வொரு வருட பொங்கலுக்கும் சாமி கும்பிடும்போது மட்டும் பயன்படும். அருகில் ஒரு மணிபிளான்ட் கொடியாக வளர்ந்து மதில்சுவற்றில் ஏறி  இருந்தது.  அது இருந்தால் வீட்டில் நிறைய பணம் கொட்டும் என்று தங்கமணி நம்பி வளர்த்து வந்தாள். இப்படியான சூழ்நிலை அந்த குருவிகளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது போலிருக்கிறது.  அடிக்கடி வந்து இடத்தை சர்வே செய்து போய்க்கொண்டு இருந்தது. 

சிலநாள் கழித்து பார்த்தால் மணிப்ளாண்ட் கொடியின் இலைகளில் கூடு கட்டி இருந்தது.  அந்த கொடியின் அளவான இரண்டு இலைகளைத் தேர்ந்தெடுத்து துளைகளிட்டு, துளைகளில் நூல் கொண்டு மடித்து தைத்து இருந்தது. மழைநீர் ஒழுகாத வண்ணம்  அழகாக மடித்த பாங்கில் தேர்ந்த அனுபவம் வாய்ந்த பொறியாளர் தெரிந்தார்.  உள்ளே தென்னை நாரைக்கொண்டு கூடு அமைத்து மெத்தென்று இருக்க கழிவு பஞ்சை பொறுக்கிக்கொண்டு வந்து மெத்தை அமைத்து இருந்தது.

நாங்கள் இதை ஆச்சர்யத்துடன் வியந்து தொட்டு தொட்டு பார்த்து ஆனந்தம் கொண்டோம்.  அக்கம் பக்கம் எல்லாம் வந்து புது குடியேறிகளையும் அதன் புது வீட்டையும் பார்த்து வியந்து சென்றனர். 
நான் இயற்கை வரலாறு அறக்கட்டளை நல்லசிவத்துக்கு தகவல் சொன்னேன்.  அவர் வந்து கூட்டை பார்த்தார்.  யாராவது கூட்டைத் தொட்டீர்களா எனக் கேட்டார்.  ஆமாம் எல்லோரும் தொட்டுத்தொட்டு பார்த்த விஷயத்தை சொன்னதும் தலை மீது கையை வைத்து உட்கார்ந்துவிட்டார்.  இனி அந்தக் குருவிகள் அந்த கூட்டை உபயோகப்படுத்தாது எனக் கூறினார்.

ஏனெனில் குருவிகள் தங்கள் கூட்டை கட்ட தேர்ந்தெடுக்கும் இடம் தனக்கு பாதுகாப்பான இடம் என்று உணர்ந்தால்தான் கூடு கட்டுமாம்.  அதுவும் அந்தக் கூட்டில் மனுசவாடை அடித்துவிட்டால் அது எப்பேர்பட்ட கூடு என்றாலும் அதை உபயோகப்படுத்தாதாம்.

குருவிகள் குடித்தனம் பண்ணுவதை பார்க்கலாம் என்று ஆவலோடு இருந்த எங்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.  அதெல்லாம் சும்மா அந்தக் குருவிகள் நிச்சயம் வந்து முட்டை வைக்கும் என்று கூறினேன்.

ஆனால் குருவிகள் வரவே இல்லை.  கூடு கட்டிய இலை காய்ந்து தொங்கும் வரை பார்த்துவிட்டோம்.  அந்தக் கூட்டருகில் குருவிகள் வரவேயில்லை.  எங்களுக்கோ மனசு மிகவும் கஷ்டமாகபோனது.   அந்த சிட்டுக்குருவிகளின் உழைப்பை மதிக்காமல் போய்விட்டோமோ என்று எங்களை நாங்களே திட்டிக்கொண்டோம்.  எனக்கு நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தபோது காலி பண்ணச்சொன்ன அடாவடி வீட்டுக்காரர் ஞாபகம் வந்தது. அந்தக் கதையை இங்கே படியுங்கள். அந்தக் குருவிகளிடம் நாங்கள் அறியாமல் செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.

தங்கமணி அந்த கொடியை வெட்டிவிடலாம் என்று கூறினாள்.  நான் வேண்டாம் எதற்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்று விட்டுவிடச்சொன்னேன்.  பிறகு காய்ந்துபோன அந்த கூட்டை எடுத்து வீட்டின் ஷோகேசில் வைத்துவிட்டு இந்த விசயத்தையே மறந்து போனோம்.

சிறிது நாள் கழித்து பின்புறம் மீண்டும் கீச் கீச் சத்தம் கேட்டது.  இந்தமுறை எல்லோரும் சர்வ ஜாக்கிரதையாக இருந்தோம்.  யாரும் பின்புறம் போய் பார்க்கவே இல்லை. அதன் கொஞ்சல்களையும் குலாவலையும் வீட்டின் ஜன்னலை சார்த்தி கண்ணாடி வழியாகவே பார்த்து ரசித்தோம். 

முன்பு மாதிரியே அந்தக் கொடியின் வேறொரு கிளையில் இரண்டு இலைகளை தேர்ந்தெடுத்து கூடு கட்ட ஆரம்பித்தது.  இதை கண்ட எங்களுக்கு மிக்க சந்தோசமாக இருந்தது.  அந்த குருவிகள் எங்களை மன்னித்துவிட்டதாக உணர்ந்தோம்.  

இந்தமுறை அந்தக் குருவிகளை சுதந்திரமாக உலவவிட்டு எங்களால் எந்த தொந்தரவும் வராத மாதிரி பார்த்துக்கொண்டோம். 
ஒருவாரம் கழித்து கூட்டின் அருகில் போய் அதை தொடாமல் உள்ளே பார்த்தபோது சின்னசின்னதாக நான்கு முட்டைகள் இருந்தது.  
அதைக்கண்டபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பிறகு அடுத்த வந்த தினங்களில் ஒவ்வொரு முட்டையாக பொறித்து மூன்று

முட்டைகளை பொரித்துவிட்டது.  ஒரு பச்சைக்குழந்தையின் சுண்டு விரல் 

அளவுக்கே இருந்த அந்தக் குஞ்சுகளின் கண்கள் மட்டும் பெரிதாக இருந்தது. 

நாங்கள் கூட்டருகில் போனபோது அது வாயை திறந்து உணவுக்காக கத்தியது 

அழகாக இருந்தது. 



இன்னும் ஒரு முட்டை பாக்கி இருக்கிறது. அது நாளை பொரிந்துவிடும்.  

இப்போது பின்புறத்தில் குஞ்சுகளின் கீச் கீச் என்ற மழலைச்சத்தம் 

கேட்கும்போது  பீத்தோவனின் சிம்பொனியை கேட்பது போல் இருக்கிறது.  

ஏதோ எங்கள் வீட்டில் பிரசவம் நிகழ்ந்து ஒரு குழந்தை வந்தது போல் 

மகிழ்ச்சி மனதில் ஆடுகிறது.


Friday, November 29, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-4. கறுப்புப் பக்கங்கள்.

மீபத்தில் ஆரம்பித்த புதுயுகம் தொலைக்காட்சி விஜய் டிவியை மிஞ்சிவிடும் போலிருக்கிறது.  அவ்வப்போது சுவராஸ்யம் நிறைந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.  உதாரணம் என்ன இங்கு இல்லை,  மனம் திரும்புதே, கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு, திரைக்கு அப்பால்,  குறு சிஷ்யன், நடிகை சங்கீதா நடத்தும் நட்சத்திர ஜன்னல் போன்ற நிகழ்ச்சிகள்.

நடிகை சங்கீதா எடுக்கும் பேட்டிகள் இயல்பாக இருந்தது. சென்ற வாரம் பாலாவுடன் எடுத்த பேட்டியில் சங்கீதா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை வார்த்தையில் தட்டையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார் பாலா.  இவரும் எவ்வளவோ முயன்றும் அவரை விஸ்தாரமாக பேச வைக்க முடியவில்லை.  ஒரு கட்டத்தில் சங்கீதாவே கேட்டுவிட்டார்.  "இப்படியே தட்டையா பதில் சொல்லிட்டு உம்ம்னு முகத்தை வெச்சிட்டிருந்தா  நான் எப்படித்தான் உங்களை இன்டர்வ்யு பண்றது?".  அதன் பிறகு கொஞ்சம் இளகி வந்தார் பாலா.

அடுத்து  நம்ம விருமாண்டி அபிராமி நடத்தும் விவாத நிகழ்ச்சிகள் கோபிநாத் அளவுக்கு சூடாக இல்லையெனினும் பரவாயில்லைரகம்தான்.  அதுவும் பாவாடை ஜாக்கெட்டில் இந்த வாரம் வந்து கருப்பா சிவப்பா என்று விவாதம் நடத்தினார்.  சும்மா சொல்லக் கூடாது.. சும்மா நச்சென்று இருந்தது.  நான் நிகழ்ச்சியை சொல்லவில்லை.

நான் சொல்ல வந்த விஷயம்.. அங்கு நடந்த விவாதத்தை பற்றி..பெண்களுக்கு பிடித்தது கருப்பா சிவப்பா என்பதே விவாதம்.  ஒரு கருப்பான பெண், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல விஜய் சேதுபதி பக்கத்துல நிக்கிற ஒரு சிவப்பான பொண்ணைப் பாத்துத்தான்... பப்பா.. யாருடா இவ இப்படி இருக்கிறா என்று கேட்பார்.  சிவப்பு அப்படியான கலர்" -என்றார்.

உடனே எதிர்புறத்திலிருந்து ஒரு சிவப்பான ஆசாமி, "அந்த படத்துல அவர் ஒரு அரை லூசா இருப்பாரு.  அதனாலதான்  அவர் அப்படி சொல்லி இருக்காரு.."-என்று ஒரு கவுண்டர் கொடுத்தார்.

உடனே அந்த கருப்பு பெண் எழுந்து, "அவர் அரை லூஸ் நிலையிலேயே அப்படி சொல்லி இருந்தார்னா,  நல்லா இருக்கும்போது எப்படி சொல்லி இருப்பாருன்னு பாத்துக்கோங்க.." என்று அதிரடியாக எதிரடி கொடுத்தார். கருப்பு பெண்களுக்கே கொஞ்சம் அறிவு அதிகம்தானோ..?

அதை விடுங்கள்.. எங்கள் வீட்டில் நடந்த கதையை கேளுங்கள்.  எங்கள் வீட்டில் எங்களது சின்ன மகனுக்கு தோசை சுட்டு போடுவதென்பது ஒரு பெரிய மகாகலை.  ஏனென்றால் தோசை கொஞ்சம் கூட கருகாமல் இருக்கவேண்டும் என்பான்.  இல்லாவிட்டால் அதகளம்தான்.  கருப்பான பக்கங்களை பிய்த்து அப்படியே ஓரமாக வைத்துவிடுவான்.

இவனுக்கு தோசை சுட்டு போடறதுக்கு பதிலா சார்க்கஸ்ல பார் விளையாட போகலாம் என தங்கமணி நொந்து கொள்வாள்.  கொஞ்சம் கொஞ்சமாக தோசையை வெந்தும் வேகாமல் எடுத்து போட பழகிவிட்டாள்.  அப்பவும் தோசை கொஞ்சம் கூட கருப்பாக அல்ல சிவந்தும் கூட இருக்கக்கூடாது.  சிவந்த பக்கங்களை கிள்ளி ஓரமாக வைத்துவிடுவான் நம்ம கில்லி.

ஒருநாள் அவனை அழைத்து பக்கத்தில் உட்காரவைத்து அறிவுரை சொன்னேன்.  அதை அப்படியே சொன்னால்தான் இன்றைய இளைய சமுதாயம்  ஏற்றுக்கொள்ள மாட்டார்களே.  ஆகையால் கதையாக சொன்னேன்.

"அந்தக்காலத்துல நம்ம முதல் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஒருமுறை இங்கிலாந்து போயிருந்தார்.  அப்போ ஒரு கூட்டத்துல இவருக்கு முன்னாடி பேசிய ஒரு ஆங்கிலேயர் வெள்ளை நிறத்தைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசினார்.  அவர்களே அறிவு மிக்கவர் என்பது மாதிரி பேசி அமர்ந்து விட்டார். அடுத்து வந்த நம்ம ஜனாதிபதி, " எங்களூரில் தோசை என்று ஒரு பதார்த்தம் செய்வார்கள். அதை வெள்ளையாக எடுத்தால் வேகாதது மாதிரி இருக்கும்.  நன்றாக வேக வைத்து எடுத்தால் கொஞ்சம் சிவந்து இருக்கும்.  ஆகையால் வெந்தும் வேகாததுகள்தான் இந்த வெள்ளைக்காரர்கள்" என்று அந்த மேடையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்."

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மகனிடம்  இதிலிருந்து என்ன தெரிகிறது? என்று கேட்டேன்.
உங்களுக்கு நல்லா கதை சொல்ல தெரிகிறது என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டு உடனே அகன்றான்.

இப்போது எங்கள் வீட்டில் ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து வருகிறோம். அதற்கு முதலில் பால் ஊற்றி வந்தோம். கொஞ்ச நாளில் பால் கசந்துவிட்டது. பிறகு இட்லி கொடுத்தோம். சமர்த்தாக சாப்பிட்டது.  கொஞ்சநாளில் அதுவும் கசந்தது.  பிறகு தயிர் சாதம் கொடுத்து வந்தோம்.  அதுவும் ஒரு நாளில் கசந்தது.  பெடிகரி வாங்கி தயிர்சாதத்தில் கலந்து வைத்தால் அன்னப்பறவையைப் போல  பெடிகரியைமட்டும்  தின்றுவிட்டு தயிர்சாதத்தை அப்படியே வைத்தது.  சரி என்று தங்கமணி ஒரு நாள் சின்சியராய் இரண்டு தோசைகள் வார்த்து அதனுடைய தட்டில் பிய்த்து போட்டுவிட்டு வந்தாள்.  கொஞ்ச நேரம் கழித்து தோசையை சாப்பிட்டுவிட்டதா என்று போய் பார்த்தால்... தோசையின் கருப்புப்பக்கம் கொண்ட ஒரு துண்டை மட்டும் சாப்பிடாமல் வைத்திருந்தது.  நான் எனது சின்ன மகனைப் பார்த்தேன்..

அவன் "ஹே ஹே ஹே .." என்று சிரித்துக்கொண்டிருந்தான்.

அதற்கு அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா?  எனக்குப் புரிந்தது...இப்போ ஜனாதிபதி  ராதாகிருஷ்ணன் கதையை நாயிடம் சொல்லு பார்க்கலாம் என்பதே அது.



 

Monday, October 7, 2013

தீண்டத்தகாதவள்...!



                           
ன்பு நண்பர்களே...

    இப்போ நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்.  அதிர்ச்சியடையாதீங்க..இப்ப நான் தற்கொலை பண்ணிக்கத்தான் போறேன்.  ஏன், எதற்கு, எப்படி?  இப்படி பல கேள்விகள் உங்க மனசுக்குள் வர்றது எனக்கு கேட்குது.  அதை சொல்லப் போறேன்.  சொல்லாம செத்தா என்னை வெறும் ரெண்டாயிரம் ரூபா செலவுல மின்மயானத்துல எரிச்சுட்டு அடுத்த அரைமணி நேரத்துல பேஸ்புக்குல ஸ்டேடஸ் போட போயிருவீங்க. அதுக்குத்தான் இப்போ நான் பேசப்போறதை ரெக்கார்ட் பண்ணப்போறேன்.

  நான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும்.  காரணம் யாரு.  நீங்கதான்.  பொதுமக்களாகிய நீங்கதான்.  இந்த சமுதாயத்துல இருக்குற ஒவ்வொருத்தரும்தான்  இப்ப நான் தற்கொலை பண்ணிக்க காரணம். அதுக்கு நான் என் சொந்தக்கதைய சொல்லி ஆகணும்.

   நான் என்ன ராஜராஜன் சோழன் வம்சமா? நீண்ட நெடிய வரலாறு கொண்டவளா? ராமசாமி என்கிற லாரி டிரைவருக்கும் சரஸ்வதி என்கிற அப்பாவி பொண்ணுக்கும் பொறந்த அனாதைப் பொண்ணுதான் நான்.  எஸ்.. நான் ஒரு அநாதை. எப்படி அநாதையானேன்.  நான் பிறந்து பத்துவயசு (இப்போ எனக்கு வயசு பதினைந்து..பத்தாவது படிக்கிறேன்) வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.  குட்டி இளவரசி மாதிரிதான் வளர்ந்தேன்.  என்னோட கூடப் பிறந்தவங்க யாரும் கிடையாது.  அதனால ரொம்ப செல்லம் கொடுத்துதான் வளர்த்தாங்க. 

   எங்கப்பா அப்பப்ப வெளியூரு லாரி லோட் அடிக்கப் போயிருவாரு.  ஒரு தடவை போனாருன்னா பத்து பதினைந்து நாளு வீட்டுக்கே வரமாட்டாரு.  திடீருன்னு வருவாரு. ஒரு வாரம் வீட்டுல இருப்பாரு.. அப்புறம் மீண்டும் கிளம்பிப் போயிருவாரு. அவர் போகும்போது எனக்கும் அம்மாவுக்கும்  என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துவிடுவேன்.  வரும்போது நான் என்னென்ன கேட்டேனோ அதெல்லாம் வாங்கி வந்துருவாரு.  ஒருநாள் நான் கேட்காததும் வாங்கி வந்தாரு.  அதுதான் எய்ட்ஸ் என்னும் அருமை  வியாதி.  அதை எனக்கு கொடுக்கலை.  ஆனா எங்க அம்மாவுக்கு அன்புப் பரிசா கொடுத்தாரு.  இதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. 

    தெரியும்போது எங்கப்பாவுக்கு நோய் முத்தி இருந்தது.  எந்த சிகிச்சை எடுதுக்கவும் வழியில்லாம கொஞ்ச நாள்லயே செத்துப்போயிட்டாரு.  ஆனா இது ஊருக்குள்ள தெரிஞ்சு என்னையும் என் அம்மாவையும் ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.  எங்களுக்கு சோறுபோடவோ, வேலை தரவோ யாரும் முன்வரலை.  எங்க தாத்தா பாட்டி சொந்தகாரங்க கூட யாரும் எங்க கூட பேசலை.  ஏன்னா இந்த நோய் அவங்களுக்கும் ஒட்டிக்குமாம்.

  என்னையும் பள்ளிக்கூடத்துல யாரும் மதிக்கலை.  என்னை தனியாவே உட்கார வெச்சாங்க.  ஒரு பயலும் என்கூட பேசக்கூட மாட்டேங்குறாங்க. விளையாட சேத்துக்க மாட்டாங்க.  நான் நல்லா கபடி விளையாடுவேன்.  ஆனா நான் இல்லாமயே கபடி விளையாண்டாங்க.  அதையும் மீறி யாராவது என்னோட விளையாண்டாங்கன்னா அவங்க அப்பா வந்து அவளை  அடிச்சு கூட்டிப் போயிடுவாரு.  கிளாஸ்ல முதல் மார்க் எடுப்பேன்.  ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்த முடியலை. 

  என்னை எந்தப் பொண்ணும் தொட்டுப் பேசமாட்டாங்க.  ஏன் என்னோட பேசவே மாட்டாங்க.  ரெண்டடி தள்ளி நின்னுதான் எதுவா இருந்தாலும் பேசுவாங்க.  ஏண்டி என்கூட பெசமாட்டேங்கறீங்கன்னு கதறிக் கேட்டேன். உன்கூட பேசுனா எங்களுக்கும் எய்ட்ஸ் வந்துரும்னு சொன்னாங்க.  அட எனக்கு எய்ட்ஸ் இல்லடின்னு கதறிச் சொன்னேன்.  அதெப்படி உங்க அப்பாவுக்கு இருக்கு. உங்க அம்மாவுக்கு இருக்கு உனக்கு மட்டும் இல்லாம போயிடும்னு கேட்டாங்க.  எனக்கு அப்பவே செத்துப் போகலாம்னு ஆயிடுச்சு. 

  எனக்கு எங்கம்மாவும் எங்கம்மாவுக்கு நானும் வாழ்ந்துட்டு இருந்தோம்.  எங்கம்மா ஊரைவிட்டு ஒதுக்குப் புறமா இருந்த ஒரு குடிசை வீட்டுல குடி இருந்தோம்.  எங்கம்மாவுக்கு எந்த வேலையும் கிடைக்கல.  யாரும் வேலை கொடுக்க தயாரில்லை.  டவுனுக்குப் போயி  கக்கூசு கழுவி கிடைக்கிற காசில எனக்கு சோறு போட்டா.  அந்த சோத்துல என்ன இருந்ததோ இல்லையோ  எங்கம்மாவோட சுத்தமான அன்பு இருந்தது.  ஒவ்வொரு நாளும் என் அம்மாவும் நானும் கண்ணீரில் எங்கள் கவலையையும் வயிற்றையும் கழுவிகொண்டோம். 
    
   கொஞ்ச நாள்ல எங்கம்மாவும் என்னை விட்டுப் போயிட்டா.  அவ போனது கூட எனக்கு துக்கமாயில்லை. அவ பொணத்தை பொதைக்கக் கூட யாரும் வரலை.  தனியொருத்தியா  என் அம்மாவின் பிணத்தை குழி தோண்டி புதைத்து குழிமேட்டில் உட்கார்ந்து அழுதபோது இந்தக் குழியில் நாமும் படுதுடலாமானு தோணுச்சு.  இருந்தாலும் என்னை அவமானப் படுத்தியவங்க முன்னால வாழ்ந்துகாட்டனும்னு தோணுச்சு.

  பிறகு என்னை பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க.  ஏன்னு கேட்டேன்.  அது அப்படித்தான் என்றார்கள்.  யாரும் என்னோடு பேசுவதில்லை.  நான் அனாதையாக வேற ஊருக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.  கால்நடையாகவே புறப்பட்டுப் போனேன்.  முதல்நாள் ஒரு கோவில் திண்ணையில்தான் படுத்திருந்தேன்,  தூக்கம் வரவில்லை.  அம்மா நினைவு வந்து கண்ணுக்குள் நின்றது.  அன்பா யாராவது என் கையை எடுத்து அவங்க மடியில வெச்சுக்க மாட்டாங்களானு ஏக்கமா இருந்துச்சு.  யாராவது அன்போடு என் தலையைத் தடவி  நெஞ்சோடு அணைத்துக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்கினேன். நினைக்க நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வாய்விட்டு அழுதேன். 

   அப்போது அருகில் படுத்திருந்த பிச்சைக்காரர் எழுந்து என்னம்மானு கேட்டார்.  தலையோடு போர்வையால் குளிருக்கு போர்த்தியிருந்தார். யாரிடமாவது என் மனசில் இருப்பவற்றை கொட்டினால்தான் மனசு ஆறும் போல தோன்றியது. எல்லாத்தையும் சொன்னேன்.  எனக்கும் இப்படிதாம்மா என்னையும் ஊரு ஒதுக்கி வெச்சுருச்சு. எனக்கும் உனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லி நெஞ்சை தடவி தரமாட்டாங்களானு இருக்குன்னு சொல்லிட்டு போர்த்தியிருந்த போர்வையை விலக்கிகாட்டினார்.  முகமெல்லாம் தழும்பாய் இருந்தது.  கை காலெல்லாம் கட்டுப் போட்டிருந்தார்.  நான் புரிந்துகொண்டேன்.  அவர் ஒரு தொழு நோயாளி. 

  அவரைப் பார்த்த மாத்திரத்தில் எந்த யோசனையும் பண்ணாது அவரை மார்போடு கட்டித் தழுவினேன்.  அவரது கை என் தலையைத் தடவியபடி இருந்தது. என் கன்னத்தில் ஒரு முத்தமிட்டார்.  நான் அவரது முதுகைத் தடவிக்கொடுத்தேன். என் கண்ணில் இருந்தும் அவர் கண்ணில் இருந்தும் கண்ணீர் ஆறாக ஓடியது.

  பிறகு அவரோடு கொஞ்ச நாள் இருந்தேன். என்னை பெத்த மக போலவே பாத்துக்கிட்டார். ஆனா இந்த சமூகத்தின் புறக்கணிப்பு அப்பவும் இருக்கத்தான் செய்தது.  எய்ட்ஸ் நோயாளியா பார்த்த என்னை இப்போ தொழு நோயாளியா பார்த்தாங்க. ஆனா எனக்கு யாரோ ஒருத்தராவது இப்போ பாசமா இருக்கார்னு ஆறுதலா இருந்துச்சு. கொஞ்ச நாள்தான் அவரும் இறந்து விட்டார். பிறகு  எனக்கு பிச்சை எடுக்க பிடிக்கலை.  ஒரு பக்கம் வேலைக்குப் போனேன்.  அவருக்கு எப்படியோ எனது பின்கதை தெரிந்துவிட்டது.  என்னை விரட்டிவிட்டார்.  இப்படியே பல இடங்களில் போய் சலித்துவிட்டேன்.

   சொல்லுங்கள் நான் என்ன தவறு செய்துவிட்டேன்.  நான் என்ன எய்ட்ஸ் நோயாளியா?  அப்படியே எனக்கு எய்ட்ஸ் இருந்தாலும் இந்த சமுதாயத்தில் நான் புறக்கணிக்கப் படவேண்டியவளா?  எல்லோர் மாதிரியும் என்னால் சாதாரணமாக வாழ முடியாதா?  நான் தீண்டத்தகாதவளா'?  என் அப்பன் பண்ணிய தவறுக்கு நானும் என் அம்மாவும் ஏன் தண்டனை அனுபவிக்கவேண்டும்.  என் கனவுகளை எல்லாம் அழிக்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது.  இந்தக் காட்சியைப் பார்த்தபிறகாவது எந்த எய்ட்ஸ் நோயாளியையும் புறக்கணிக்காதீர்கள்.  எய்ட்ஸ் ஒன்றும் தொற்றுவியாதி இல்லை.  இந்த நோய் வந்தவர்களை யாரும் ஒதுக்கி வைக்காதீர்கள்.  அவர்களும் உங்களைப்போல எலும்பும் சதையும் முக்கியமாக இதயமும் உள்ள மனிதர்கள்தான்.

  என்னை புறக்கணித்தவர்களே இதோ இங்கே எனக்கு அருகில் ஒரு டெஸ்ட் ரிப்போர்ட் இருக்கிறது. இதில் எனக்கு எய்ட்ஸ் மற்றும் தொழுநோய் இல்லையென்று உறுதி செய்திருக்கிறார்கள்.  நான் செத்தபிறகு என் பிணத்தை என் அம்மா புதைக்கப்பட்டிருக்கும் மயானத்தில் புதையுங்கள்.  அதற்குமுன் எல்லோரும் என் பிணத்திற்கு வாய்க்கரிசி போடுவதற்கு பதிலாக என் தலையை ஒரு முறை அன்போடு நீவி விட்டு செல்லுங்கள்.  

இப்படிக்கு

உங்களால் புறக்கணிக்கப்பட்டு இரக்கமில்லாதவர்களால் இறக்கவைக்கப்பட்டவள்.

Saturday, September 14, 2013

பிச்சை



சில நேரங்களில் பிச்சை எடுப்போரிடம்தான்  நமது மேதாவித் தனத்தை காட்டுவோம். அப்போதுதான் உலகப் பொருளாதார ஞாபகம் வந்து அவனிடம் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் பற்றி லெக்சர் எடுப்போம். மன்மோகன்ஜியே கவலைப்படாத போது நாம் நமது சமூகக் கடமையை அவனிடம்தான் காட்டுவோம்.

ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்தோடு பழனி சென்றபோது நடந்தது.  மதியம் அங்கிருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தேன்.  மனைவி வரவேண்டியிருந்தது. அப்போது அழுக்கடைந்த சட்டையுடனும் பரட்டை தலையுடனும் ஒருவர் என்னை மெல்ல அணுகினார்.  பார்த்தவுடனே பிச்சைக்காரன் என்பதை கணிக்கும் வகையிலான தோற்றம் கொண்டிருந்தான்.

 “சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.  ஒரு பத்து ரூபா இருந்தா கொடுங்களேன்.”-என்றான்.

பசி என்கிற வார்த்தை என்னை எப்போதுமே உருக்கிவிடும்.  சரியான வார்த்தையாய் பொறுக்கி எடுத்து வீசுகிறான்.

நான் மேலும் கீழும் அவனை பார்க்கிறேன்.  ஒரு இருபத்தைந்து வயது மதிக்கலாம்.  கை கால்களில் எந்த சேதாரமும் இல்லை.  கண்களில் கஞ்சா கலவரம் தெரிந்தது.  லேசான புளிச்ச தயிர் வாசனை.  ஆல்கஹால்.

“யேப்பா... நல்லாத்தான இருக்கிற ஏதாவது வேலைக்கு போலாமில்ல...?.”என்னை மேலும் கீழும் பார்க்கிறான்.  என்னை எடை போடுகிறான் போல தெரிகிறது.

“சார் ரொம்ப பசிக்கிறது சார்.  ஒரு பத்து ரூபா போதும்.. தாங்க...”“வேலை வேணா தர்றேன்.  நல்ல சம்பளமும் தர்றேன்.  என் கூட வர்றியா?”

இப்போது அவன் பார்வையில் கேலி தெரிந்தது.  இருந்தபோதும் அதை அடக்கிவிட்டு “சார் பத்து ரூபா கொடுங்க போதும். பசிக்குது” என்று அதே பல்லவியையே பாடினான்.

அப்போது அருகில் ஒருவர் வந்து,  “சார் இவனுக்கு எதுவும் கொடுத்துராதீங்க... காசை வாங்கியதும் நேரா டாஸ்மாக்க்குதான் போவான்.”-என்று ப்ரீ அட்வைஸ் கொடுத்தார்.

அவன் அவரையும் ஒரு மாதிரி கேலியாகப் பார்த்துவிட்டு மீண்டும் அதே பல்லவியை பாடினான்.

அதற்குள் எனது தங்கமணியும் வந்திருந்தார்.  இதையெல்லாம் பார்த்துவிட்டு,  “உங்ககிட்ட நானே ஒரு பைசாவும் வாங்கிற முடியாது.  இவன் எப்படி வாங்குரான்னு நானும் பார்க்கிறேன்.”  என்று கிண்டலாக ஒரு பார்வை பார்த்தார்.

இது எனக்கு கௌரவப் பிரச்சினையாய் போயிற்று.  நான் அவனை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்குச் சென்று,  அங்கிருந்த கேஷியரிடம், ”இவருக்கு ஒரு சாப்பாடு கொடுத்திருங்க.  காசு நான் கொடுத்திடறன்”-என்றேன்.

“சார் உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை...”

“இல்லை.. பசிங்கறான்..  அதான்.”

அவர் இப்போது எழுந்து வெளியே வந்தார்.  அவனை முழுமையாக பார்த்தபிறகு,  “சார் நாலு கஷ்டமர் வந்து போற இடம்.  உட்கார வெச்செல்லாம் சோறு போடா முடியாது.  வேணா பார்சல் கொடுத்துடலாம்...  என்னடா பார்சல் சாப்பாடு வாங்கிக்கிறயா?”-என்று அவனிடம் கேட்டார்.

அவன் என்னையும் அவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு “பார்சல்  என்ன விலை?”-என்றான்.

“குசும்பைப் பார்த்தீங்களா?  விலை சொன்னாதான் சாப்புடுவீங்களோ?  சார் அறுபது ரூபா டோக்கன் வாங்கி கொடுத்திருங்க..”

இதைக் கேட்டதும் அவன் “அறுபது ரூபாயா?  ரொம்ப அதிகம்.” என்று வாயைப் பிளந்து நின்றான். 

“டே போடா அப்படி... சார் இவன் என்ன சோறு வாங்கி கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்.  அவனுக்கு தேவை தண்ணி அடிக்க காசுதான்.  டே..ஒதுங்கி ஓரமா நில்லு.   கஸ்டமர் வர்ற நேரம்.”

அடி பட்ட புலியாய் கேஷியர் உள்ளே போய்விட்டார்.

“சார் இவர் சாப்பாட்டுக்கு அறுபது ரூபா ரொம்ப ரொம்ப அதிகம்.  நீங்க எனக்கு பத்து ரூபா கொடுங்க போதும்.  நான் வேற பக்கம் சாப்பிட்டுக்கிறேன்.”
 “என்னங்க இன்னும் பஞ்சாயத்து தீரலையா?  வாங்க நேரமாகுது போகலாம்”-என்று தங்கமணி அழைத்ததும் நான் பாக்கெட்டுக்குள் விட்ட கையை எடுத்துவிட்டு காரை நோக்கி சென்றேன். 

அவன் என் பின்னாலேயே சார் சார் என்று வந்தான்.நான் காருக்குள் ஏறி உட்கார்ந்தும் விடவில்லை அவன்.

தங்கமணி “ஏங்க ஒரு பத்து ரூபா இருந்தாதான் கொடுத்துவிடுங்க.  அவன் என்னமோ பண்ணட்டும்.”-என்றாள்.

எனக்கும் அவனை ஏமாற்ற விரும்பாமல்  பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.

அவன் ரூபாய் தாளைப் பார்த்துவிட்டு “ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று நகர்ந்தான்.  இரண்டடி போனவன் திரும்பி வந்து என்னைப் பார்த்து, “மீதி ஐம்பது ரூபாவை நீயே வெச்சுக்கோ”-என்று சொல்லியபடி விடுவிடுவென நடந்து போய்விட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை,  “என்ன சொல்லிட்டு போறான்?” என்று தங்கமணியிடம் கேட்டேன்.

“புரியலியா... அவன் உங்களுக்கு பிச்சை போட்டுட்டு போறான்.”

நான் ங்கே என்று விழித்தபடி இருந்தேன்.

இது என் நண்பருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்.  

Wednesday, January 23, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-3

எய்ட்ஸ் எனும் மாய நோய்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் சங்கர் ஒரு குறும்படம் எடுத்தார். அது எய்ட்ஸ் பற்றிய மெசேஜ் கொண்ட ஒரு திரில்லர் படம்.  அந்தப் படத்திற்காக ஒரு மேன்சன் பில்டிங் வேண்டும் என்று கேட்டார். நான் ஒரு நண்பரிடம் உதவி கேட்டேன். அவரும் அவர் தங்கியிருந்த மேன்சன் முதலாளியிடம் அனுமதி பெற்ற பின்னர் எங்களை வரச் சொன்னார்.

நாங்களும் தட்டுமுட்டுச் சாமான்களோடு கொஞ்ச நேரத்தில் ஆஜர் ஆனோம். ஒரு ரூமைக் கைப்பற்றி அதை தங்கள் வசம் ஆக்கிகொண்டனர் படப்பிடிப்பு குழுவினர். எல்லா ஏற்பாடுகள் முடிந்து காமிரா கோணம் பார்த்து நடிப்பு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மேன்சன் முதலாளி வந்தார். டைரக்டரை அழைத்து கதையைக் கேட்டார். டைரக்டர் சங்கரும் ரொம்பவும் சின்சியராக அவரை அமர வைத்து முக பாவங்களோடு கதை சொல்லிக்கொண்டு இருந்தார். கதையில் எய்ட்ஸ் என்ற வார்த்தை வந்ததுமே போதும் என்று சொன்னவர் உடனே 'பேக்கப்' சொல்லிவிட்டார். டைரக்டர் பிதுக் பிதுக் என்று முழிக்கிறார். என்னடா நாம் சொல்லவேண்டிய வார்த்தையை இவர் சொல்கிறாரே என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.

நாங்கள் அவரை சமாதானப் படுத்தும் நோக்கத்தில் சென்று அவரிடம் பேசினால்,  அவர் நாங்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

"இல்லைங்க இந்த மாதிரி படம் இங்க எடுக்கக் கூடாது" -என்று கீறல் ரெக்கார்ட் மாதிரி இதையே திருப்பி திருப்பி சொன்னார்.

நாங்களும்,"உங்ககிட்ட அனுமதி வாங்கித்தானே நாங்கள் இங்கே வந்தோம்?" என்றோம்.

"நான் ஏதோ சின்னப் பசங்களுக்கு படம் எடுக்கறீங்கன்னு நினைச்சேன்"-என்றார்.

எவ்வளவோ பேசிப்பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. எங்களை வெளியே அனுப்பி கதவைச் சாத்திவிட்டுத்தான் சென்றார்.

எய்ட்ஸ் என்றால் இவ்வளவு விழிப்புணர்வா(?) என்று ஆச்சர்யப்பட்டோம்!!!!

Tuesday, January 22, 2013

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

திருப்பூர் புத்தகத் திருவிழா 2013-ஐ ஒட்டி சென்ற ஞாயிற்றுக்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்கான கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றன.  

இந்த நிகழ்வுக்கு சேர்தளம் சார்பில் நானும் சென்றிருந்தேன்.  நான் போன வருடம் மாதிரி சாதாரணமாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.  ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது,  மிகப் பிரமாண்டமான கூட்டம் கூடி இருந்தது.  

குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிக்கென்று சுமார் ஆறாயிரம் பேர் திரண்டிருந்தனர்.  அவர்களனைவரையும் ஒருங்கிணைத்து அமரவைத்து ஓவியம் வரையவைத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  
ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் குழந்தையோடு பங்கேற்று ஒரு தேர்த் திருவிழாவுக்கு வந்த சந்தோசத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு கூட்டத்தை சேர்த்த புத்தகத் திருவிழா குழுவினருக்கு நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும்.  ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் அவர்களின் சீருடையோடு பேருந்தில் அழைத்து வந்திருந்தார்கள்.  

இத்தனை ஆர்வம் எப்படி வந்தது என்று பார்த்தால்  இப்போது இருக்கும் சமச்சீர் கல்வியே காரணம் என்றே தெரிந்தது.  இந்தக் கல்வி திட்டத்தில் மாணவர்களின் தனி மனிதத் திறமையை வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது உண்மை.


எனது பையன் படிக்கும் மெட்ரிக் பள்ளியில் கூட சமச்சீர் கல்விதான்.  ஒரு நாள் ரீசைக்ளிக் பொருள்களில் ஏதாவதொரு உபயோகமான பொருளைச் செய்து வரச் சொன்னார்கள்.  கவிதை எழுதச் சொன்னார்கள்.  நாடகம் போடச் சொன்னார்கள்.  தொலைகாட்சி நல்லதா கேட்டதா என்று பட்டிமன்ற விவாதம் செய்யச் சொன்னார்கள்.   ஒவ்வொருவரும் இரண்டு நிமிடம் ஒரு பொருளைப் பற்றி பேசச் சொன்னார்கள்.  ஓவியம் வரையச் சொன்னார்கள்.  ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப் பற்றிய தகவல் சேகரிக்கச் சொன்னார்கள்.  வீட்டைச் சுற்றியுள்ள மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை சேகரித்து எடுத்து வரச் சொன்னார்கள்.  இதற்க்கெல்லாம் ஒரு மதிப்பெண் கொடுத்து மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துகிறார்கள்.


நிச்சயமாகச் சொல்கிறேன்.. சத்தமில்லாமல் ஒரு தலைமுறை நல்லமுறையில் உருவாகிக்கொண்டிருக்கிறது.  அதற்கான அடையாளமே இவ்வளவு கூட்டம் கூட்டமாக ஒரு போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனை கூட்டமும் புத்தகக் கண்காட்சிக்கு வருமேயானால் புத்தகத் திருவிழா நிச்சயம் தேர்த் திருவிழாவாக மாறும்...பிரமாண்ட வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.


கவிதைப்போட்டியில் சில சுவராஷ்யங்கள்..
நான் கவிதை எழுதிய தாள்களை சேகரிக்கும் பணியில் இருந்ததால் சில கவிதைகளை படிக்கும் பாக்கியம் கிடைத்தது....

ஒரு பையன் 'மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று பாரதிதாசன் கவிதையை அப்படியே எழுதி இருந்தான்.
இன்னொருவனோ அழகான கையெழுத்தில் 'வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம்" என்று பாரதியாகி இருந்தான்.  இன்னொருவன் வெற்றி நிச்சயம் என்று அண்ணாமலை பாட்டை அப்படியே எழுதி இருந்தான்.  ஒரு பள்ளியில் இருந்த வந்த நான்கு பேரும் ஒரே மாதிரி கவிதை எழுதி  வரி மாறாமல் எழுத்துப் பிழைகூட மாறாமல் எழுதி இருந்தார்கள்.

கலாய்ப்பதற்கேன்றே வருவார்கள் போலிருக்கிறது.   
 

Monday, January 21, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-2.


ப்ளாக் பக்கம் தலைகாட்டி வெகு நாளகி விட்டது. உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது.  அதுதான் மூக்கையாவது காட்டிவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன்.

எனது ரசிகர் பட்டாளம்(?) வேறு எழுது எழுது என்று ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரமும் கெஞ்சிக் கொண்டிருப்பதால் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  ஆகையால்.... இனி நான் உங்களை விடமாட்டேன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்..


எங்களது வீட்டில் எப்போதும் ரகளைதான்.  யாராவது ஒருத்தர் பல்ப் வாங்கிக் கொண்டிருப்போம்.

நேற்று காலை டிபன் நேரம்.  தங்கமணி தோசை வார்த்து போட்டுக்கொண்டிருந்தாள். நெடு நாட்களாக எங்களுக்கு வைக்கப் படுகிற சில  தோசைகளில் நடுவில் வட்டமாக உள்ளங்கை அளவில் ஒரு சிறிய பாகம் காணாமல் போய் இருக்கும்.  அது எப்படி என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  இருந்தபோதும் தோசை ருசியாக இருப்பதாலும் முருகலாகவும் இருப்பாதால் கேள்விகள் கேட்பதில்லை.  மேலும் வாய் என்பது சாப்பிடத்தானே தவிர கேள்வி கேட்பதற்கு இல்லை என்பது எங்கள் வீட்டில் டைனிங் டேபிள் விதிகளில் ஒன்று.

இந்த விதியை மீறி அவ்வப்போது நாங்கள் பல்ப் வாங்கிக்கொள்வதும் உண்டு. எனது பிள்ளைச் செல்வங்களுக்கு தோசை முருகலாக இருந்தாக வேண்டும்.  ஆனால் கொஞ்சம் கூட தோசை தீய்ந்து கருகக்கூடாது.    எனது சின்னப் பையன் யுகாவுக்கு வைக்கப்பட்ட தோசையில் நடுவில் கொஞ்சம் கருகி இருந்தது. உடனே தட்டுக்கும் பூமிக்குமாக குதித்தான்.

உடனே சமையலறையில் இருந்து ஓடிவந்த தங்கமணி அடடா கருகிய பாகத்தை டெலீட் செய்யாம கொடுத்திட்டேனே என்றாள்.  அப்போதுதான் எங்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ரகசியம் புரிந்தது.

மகனோ, "ஏம்மா எனக்கு கருத்த தோசையை கொடுத்தே.  தூக்கி வெளியே போடவேண்டியதுதானே" -என்றான்.

தங்கமணி அவனை நிதானமாக முறைத்தபடி,  "அப்படியா... அப்படீன்னா முதல்ல உன்னைத்தான் தூக்கி வெளியே போட்டிருக்கணும்.  உன்னைப் பெத்தப்போ கருப்பா இருந்த்தன்னு  அப்பவே தூக்கிப் போட்டிருக்கணும்"-என்றாள்.

அவ்வளவுதான்.  கப்சிப்.  டைனிங் டேபிள் விதி தன்னால் அமுலுக்கு வந்தது.
நான்,"செவ்வாழ வாயை வெச்சுட்டு கம்முன்னு இருடானா கேக்கிறியா?"-என்று சொன்னேன்...(மனசுக்குள்தான்!!!!).


வாழ்கையில் நல்லா...
கனவுகள்  சுவராஸ்யமானவை. அதுவும் எனக்கு வரும் கனவுகள் அவ்வப்போது ஒரு குறும்படத்துக்கான கருவைத் தந்திருக்கின்றன.  போனவாரம் வந்த கனவு அற்புதமானது.

நடு இரவு நேரம்.  ஒரு மெயின் ரோட்டில் நடு ரோட்டில் உட்கார்ந்து நாலைந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருகிறோம். அதில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்  பையனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  நான்,"வாழ்க்கையில் அடிபட்டாத்தான் உயரமுடியும்டா.  எவ்வளவு அடிபடுகிறோமா அவ்வளவு அனுபவம் கிடைத்து நல்ல உயரத்துக்கு வளர முடியம்"-என்கிறேன்.

அப்போது நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வருகிறது.  நாங்கள் நடு ரோட்டில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதைப் பார்த்து எங்களை மிரட்டி அனுப்புகிறது.  எல்லோரும் விலகிவிட அந்தப் பையன் மட்டும் அங்கேயே நிற்கிறான்.  எதிர்த்து பேசுகிறான்.  போலீஸ் அவனை நாலு மிதி மிதித்து அனுப்புகிறது.  நாங்கள் அவனை சூழ்ந்து "ஏண்டா அடி வாங்கினே... பேசாம வரவேண்டியதுதானே"-என்று கேட்கிறோம்.  அவனோ,"நீங்கதானே  அடிபட்டாதான் முன்னேறமுடியும்னு சொன்னீங்க.  அதனாலதான்!"-என்கிறான்.  கட்.  கனவு கலைகிறது.

இன்னும் நிறைய கனவுகள் இருக்கிறது... பிறகு பகிர்கிறேன்.


பிரியாத ப்ரியங்களுடன்...