PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Sunday, February 2, 2014

PURSUIT OF HAPPYNESS (2006)- அமெரிக்க வாழ்வியலின் மறுபக்கம்.

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திங்களன்று திரையிடப்படும் திரைப்படம் PURSUIT OF HAPPYNESS.   

வில் ஸ்மித் தனது மகனோடு நடித்த இந்தப் படம் எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
க்ரிஸ் கார்ட்னர் என்கிற ஒருதொழிலதிபர் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவமே இந்தக் கதை.
ஸ்கேனிங் மெசின் விற்கும் தொழில் செய்யும் ஸ்மித்துக்கு அந்தத் தொழில் அப்படியொன்றும் வருமானம் தருவதில்லை.  மனைவியும் வேலைக்குப் போய் சம்பாதித்து வருவதால் வண்டி ஓடுகிறது.  பள்ளிக்கு போகும் ஒரு பையன் வேறு. ஆனால் மனைவியின் சம்பாத்தியம் வந்தும் கூட அடிச்சுக்கோ பிடிச்சுக்கோ என்றுதான் இருக்கிறது.  வீட்டு வாடகை கூட கொடுக்க முடிவதில்லை. 


வேறு வேலை தேடும் ஸ்மித்துக்கோ அது குதிரைக்கொம்பாய் இருக்கிறது. ஒரு ஸ்டாக் கம்பெனியில் அப்படி இப்படி காக்கா பிடித்து இன்டர்வ்யுக்கு அழைக்கப்படுகிறான். இதற்கிடையில் இவன் மீது நம்பிக்கையிழந்த மனைவி பையனை விட்டுவிட்டு லெட்டர் (பையனை நீ நல்லா பாத்துக்குவேனு தெரியும்) எழுதிவைத்து விட்டு தன் வழியைத் தேடி போய்விடுகிறாள். வீட்டு ஒனரோ வாடகை தராட்டியும் பரவாயில்லை வீட்டுக்கு பெயிண்ட்டாவது அடி என்று உத்தரவிட்டுப் போகிறார்.

பெயிண்ட் அடிக்கும்போது போலீஸ் வந்து நோ பார்க்கிங்க்ல காரை நிறுத்தியதுக்கு  அரஸ்ட் பண்ணி ஜெயிலில் வைத்துவிட பையனை தனியே விட்டுவிட்டு சிறையில் ஒரு நைட் இருக்க நேர்கிறது. அபராதம் கட்டிவிடுகிறேன்,காலையில் இன்டர்வ்யுவுக்கு செல்லவேண்டும் என எவ்வளவோ கெஞ்சியும் காவலர்கள் விட மறுக்கிறார்கள்.  காலையில் அவன் வெளியே வரும்போது இன்டர்வ்யுக்கு நேரம் ஆகிவிட்டது.  அப்படியே சாயம் தெறித்த சட்டையோடு முகம் கூட கழுவாமல் அப்படியே இன்டர்வ்யு போகிறான்.


இன்டர்வ்யுவில் இவன் கோலத்தைப் பார்த்து ‘நீங்கள் முதலாளியாக இருந்தால் அழுக்குச் சட்டையோடு இன்டர்வ்யுவுக்கு வருபவரை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று அதிகாரி சாமர்த்தியமாக கேள்வி கேட்க,“பேன்ட் நல்லா இருக்கே” என்று சாமர்த்தியமாக பதில் சொல்ல வேலை கிடைத்துவிடுகிறது.  ஆனால் ஒரு கண்டிஷன் ஆறு மாதம் சம்பளமில்லாமல் வேலை செய்யவேண்டும், அதன் பிறகு வேலைத் திறனைப் பொறுத்து வேலையும் சம்பளமும் கிடைக்கும் என சொல்கின்றனர்.  வேறு வழியில்லாமல் சரி என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்கு வருகிறான்.

கையில் இருக்கும் மூன்று பாடாவதி மெசினை நம்பி ஆறு மாசம் ஒட்டவேண்டும்.  இதில் ஒரு மெசினை ஒரு பிச்சைக்காரி திருடிவிடுகிறாள்.  இன்னொரு மெசின் ஒரு பைத்தியகாரன் எடுத்துப்போய் டைம் மிசின் விளையாட்டு விளையாட வைத்துக்கொள்கிறான்.

வீட்டு ஓனர் வீட்டை காலி செய்யச் சொல்ல வேறு வழியில்லாமல் ஒரு விடுதியில் தங்குகிறான்.  பையனையும் தன்னோடு வைத்துக்கொண்டு அவன் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. வாடகை தரமுடியாதலால் இரவு நேரத்தில் சாமானைத் தூக்கி வெளியே வைத்து அறையை பூட்டிவிடுகிறார்கள்.  பாங்கில் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் வருமான வரிக்காக (வருமானமே இல்லாதவனுக்கு வருமான வரி) அரசாங்கம் எடுத்துக்கொள்ள எதுவுமில்லாமல் நடுத்த தெருவில் நிற்கிறான்.

பையனோடு ரயில்வே ஸ்டேசன் கழிவறையில் படுத்துக்கொல்வதும் டைம் மெசின் விளையாட்டு விளையாடுவதும்  பார்ப்பவர் நெஞ்சை பிசையும் காட்சிகள். 

இப்படியாக ஒவ்வொரு துன்பம் மேல் துன்பம் பெரும் அவன் வாழ்வில் விடிவெள்ளி முளைத்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.

நண்பர்களே அமேரிக்கா ஒரு பணக்கார நாடு அங்கு ஏழைகளே இல்லை எனும் ஒரு மாயையை கிழித்து தொரனமிடுகிறது இப்படம்.  அமெரிக்க வாழ்வியல் முறையை அட்டகாசமாய் காட்சிபடுத்துகிறது இப்படம்.  எல்லாத் திறமைகளும் கொண்ட ஒருவன் அமெரிக்க சமுதாயத்தில் ஜெயிக்க என்னென்ன கஷ்டப்படவேண்டும் என்பதை அழகாக சொல்லும் படமிது.

பையனை அழைத்துக்கொண்டு வீதி வீதியாக சுற்றும்போது ஒரு குருவி தன் குஞ்சைக் காப்பாற்ற என்னவெல்லாம் போராட்டம் நடத்துகிறது என்பது நினைவுக்கு வருகிறது.
இளமையில் வறுமை என்பது கொடுமையில் மிகக்கொடுமை.
என் சிறுவயதுக் காலத்தில் எங்கள் வீட்டில் மிகவும் வறுமை.  ஆனாலும் என் அன்னை ஒருபோதும் எங்களை பட்டினி போட்டதில்லை.  காட்டு வேலை செய்தாவது அல்லது தானியங்கள் கடன் வாங்கியாவது சட்டியில் கஞ்சியோ கூழோ ஏதாவதொன்று சாப்பிட இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.  இன்று வரை என் அன்னை யார் வீட்டுக்கு வந்தாலும் முதலில் சொல்லும் வார்த்தை ‘ சாப்புடு சாமி” என்றுதான்.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது என் இளமைக்கால ஞாபகங்கள் அடுக்கடுக்காக கிளர்ந்தெழுகின்றன.  நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கும்.

பையன் படிக்கும் பள்ளியில் HAPPYNESS என்று எழுதி இருப்பதை HAPPINESS என்று திருத்தச் சொல்ல அதனால் பள்ளியில் ஏற்படும் வன்மமும்,  அந்த வாத்திச்சி இவனை பாக்கும்போதெல்லாம் முறைப்பதும்,  சர்ச் விடுதியில் தங்க க்யூவில் நிற்பதும் இடையில் ஒருவன் புகுந்து தகராறு செய்வதும்,  தனது சீனியர் முன்பு க்யூப் சால்வ் செய்வதும், அவர் கார் வாடகை தராமல் போய்விட தன்னிடமும் பணம் இல்லாமல் கார் வாடகை தர முடியாதலால் ஓடுவதும், அந்த ஓட்டத்தில் தன்னிடம் இருக்கும் ஒரு ஸ்கேன் மிஷினை இழப்பதும்,, அவரிடமே வேலைக்குச் சேர்ந்த பிறகு தன்னிடம் பணம் இல்லையெனினும்  கார் வாடகைக்காக கடன்  தருவதும்,  ஒரு பென்சன் பிளான் போடவைக்க ஒரு பணக்காரனோடு ரக்பி மேட்ச் பார்க்க தனது மகனோடு போவதும் அங்கே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன்  பணக்காரனோடு படும் அவஸ்தையும் என படம் நெடுக வாழ்ந்து காட்டி இருக்கிறார் வில் ஸ்மித்.

இறுதிக் காட்சியில் ஒரு வெற்றுப் பார்வையோடு ஒரு துளி கண்ணீரும் சிந்தும் வில் ஸ்மித் நம்மையும் கண்ணீர் சிந்த வைக்கிறார்.  இறுதிக்காட்சியில் ஜனங்கள் நிறைந்த அந்தத் தெருவில் தானும் ஒரு ஜெயித்த மனிதனாய் தனக்குத் தானே பாராட்டி கையை தட்டிக்கொண்டு போகும் காட்சி இயக்குனர் பெயர் சொல்லும்- Gabriele Muccino.
இறுதி காட்சியில் அப்பாவும் மகனும் பேசிக்கொண்டே தெருவைக் கடக்கும் போது இவர்களை கடந்து போவார் நிஜ க்ரிஸ் கார்ட்னர்.


எதுவும் கடந்து போகும்தான்.....
வலிகளையும்
வடுக்களையும் ஏற்படுத்தி 
இதுவும் கடந்து போகுமே....!!!
 

2 comments :

  1. REALLY WONDERFUL REVIEW MR. HORSE ARUNAA..

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த படம். மிக அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......